Pages

Monday 29 October 2018

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!!

தலைவர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம்  (சிறு குறிப்பு)  !!!

                                 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ 

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(68:4)

மனிதர்களில் சிறந்தவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லர். மாறாக நற்குணம் படைத்தவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவர். நற்குணம் படைத்தவர்கள் புகழ் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைத் தேடி புகழ் ஓடி வருகிறது. 

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

நாகரீகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, சரியான கொள்கை கோட்பாடுகளற்ற, மௌட்டீக மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கே அல்லது நம்பிக்கைக்கே எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்றால், நிச்சயமாக! அந்த மக்கள் பிற மதங்களை ஆராய்ந்தோ அல்லது இறைவன், நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் நாட்டங்கொள்ளச் செய்தது என்றால் மிகையாகாது.
நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது அல்லது ஒரு நிரந்தர நல்விளைவினை ஏற்படுத்தாது.

இன்னும், அல்லாஹ் தனது திருமறையிலே தனது தூதரை நோக்கி

                فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்(3:159)

என்று கூறுகிறான்'. ஆக நபி(ஸல்) அவர்களை கடுமையானவராகவோ அல்லது முன்னுக்குப்பின் முரணாகவோ அந்த மக்கள் கண்டிருந்தால், அவர்களை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள். கொள்கையைப் பற்றியெல்லாம் அந்த தருணத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நற்குணம் அந்த மக்களை இஸ்லாத்தில் நுழையச் செய்தது மட்டுமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் நற்குணவாதியாகவும், சத்திய சீலர்களாகவும் மாற்றியது.
அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது எது? என வினவப்பட்டபோது தக்வாவும், நற்குணங்களும்தான் என்றார்கள் நபியவர்கள்.
ஆதாரம்: திர்மிதீ

நற்குணம்தான் மறுமையில் நன்மையின் தராசை கனமாக்கக்கூடியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) 
நூல் : அபூதாவூத் 4799, திர்மிதீ 2002

எனக்கு அதிகம் நேசத்திற்குரியவரையும், மறுமைநாளில் என்னுடைய சபையில் அதிக நெருக்கத்திற்குரியவரையும் நான் அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் மௌனமாக இருந்தார்கள். இரண்டு தடவை மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டார்கள். இறுதியாக நபித்தோழர்கள் அல்லாஹ்வின்  தூதரே கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களிள்   அழகிய குணம் கொண்டவரே என பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐய் (ரலி) 
நூல் : அஹ்மத் 6735, புகாரியின் அதபுல் முஃப்ரத் 275

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்த அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.  அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள்: நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள். 
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அவர்கள், ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

பிறரின் மனதில்  கவலையை ஏற்படுத்தும்  ஒன்றை கூட  நபி(ஸல்) அவர்கள் செய்ய விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக அளித்தேன், அதை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் அப்பொழுது என் முகத்திலுள்ள (வருத்தத்தை பார்த்து ஹஜ்ஜிற்காக) நாம் இஹ்ராம் கட்டி இருப்பதால், இதை (வேட்டையாடப்பட்ட காட்டு கழுதையை) ஏற்றுக் கொள்ளாமல் நாம் உம்மிடம் திருப்பிக் கொடுக்கிறோம் என அவர்கள் கூறினார்கள். 

(புகாரி, முஸ்லிம்)

சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர்.
நபி(ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.
நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.
நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' 

(ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தங்களது சொல், செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.
அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார்.
நபி(ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். 

(முஸ்னத் அபூ யஃலா)

சரி! நற்குணம், நற்குணம் என்று எழுதுகிறோம். பேசுகிறோம். நற்குணம் என்றால் என்ன? அதன் அளவு கோல் என்ன? நற்குணங்களைப் பெறுவது எப்படி? பிறரிடம் நற்குணத்துடன் பழகுவது எப்படி? 

ஆம். நற்குணத்தின் ரத்தினச் சுருக்கமும், அதன் சாராம்சமும் பின் வரும் முத்தான மூன்று அம்சங்கள்; அம்மூன்றிலும் எண்ணிலடங்காத பல அம்சங்கள் புதைந்து கிடைக்கின்றன.

''நற்குணம் என்பது 
1. மலர்ந்த முகத்துடன் புன்முறுவல் பூப்பது 
2. நலவுகளைச் செலவு செய்வது 
3. நோவினையைத் தடுப்பது''

 (அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்)
 நூல்: திர்மிதி) 

மேற்கூறிய மூன்று அம்சங்களையும் பேணக்கூடிய ஒவ்வொருவருமே நற்குணங்கள் உடையவர்களே!

முத்தான மூன்று அம்சங்களையும் கடைப்பிடித்த காரணத்தால்தான் நமது நாயகத்தை  ''நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்''  என்று உலகம் போற்றுகிறது.

''சங்கையான நற்குணங்களை பரிபூரணப்படுத்தவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று நபிகளார் கூறினார்கள்.
 (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்பொழுதுமே யாரைக் கண்டாலும் முகமலர்ச்சியுடன் புன்னகை புரிவார்கள்; இறுக்கமான முகத்துடன் அவர்களைக் காணமுடியாது. இன்முகத்துடன் எந்நேரமும் இருப்பார்கள்.

''நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பத்தாண்டு காலம் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னைப் பார்த்து 'ச்சீ' என்று ஒருபோதும் கூறியது கிடையாது. நான் செய்ததை 'ஏன் செய்தாய்?' என்றோ, நான் செய்யாததை 'நீர் இவ்வாறு செய்ய வேண்டாமா?' என்றும் கேட்டது கிடையாது'' 
(அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருவருப்பாக பேசுபவராகவும், அருவருக்கத்தக்கவைகளைக் கேட்பவராகவும் இருந்ததில்லை'' (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஆஸ் (ரலி) நூல்: புகாரி)

மேலும் அதிகமான நன்மைகளை நபிகளார் மக்களுக்குச் செய்திருக்கிறார்கள்.

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எதைக் கேட்டாலும் அவர்களிடம் இருந்து 'இல்லை' என்று பதில் வந்தது கிடையாது'' 

(அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி)

நற்குணம் என்பது பொருளை செலவு செய்வது மட்டு மல்ல; நன்மையான ஒவ்வொன்றுமே நற்குணம்தான்.
மேலும் நபிகளார் யாருக்கும் எந்த விதத்திலும் நோவினை கொடுத்தது கிடையாது. பகைவனுக்குக் கூட நன்மை செய்தவர், பெருமானார் (ஸல்) அவர்கள்.

''நபிகளார் தீங்குக்குப் பதிலாகத் தீங்கு செய்பவராக இருந்ததில்லை; எனினும் மன்னிக்கும் மனப்பான்மை உடையவராக இருந்திருக்கிறார்கள்.'' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) அவர்கள்)

நற்குணங்களின் அடிப்படையான  முத்தான மூன்று குணங்களிலும் நபி (ஸல்) அவர்கள் முத்திரை பதித்துள்ளார்கள். நற்குணங்களைப் பேணுகின்றவர்கள் இந்த மூன்று அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

''ஒரு இறைவிசுவாசி, நற்குணத்தின் மூலம் பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் மேன்மையை அடைந்து விடுகிறார்.”

 (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூ தாவூத்)

நபி(ஸல்) அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் நமதுவாழ்க்கையில் கொண்டுமுன்மாதிரி மனிதனாக நாம் வாழ வேண்டும் .அதிலும் குறிப்பாக மாற்று சமய மக்களிடம் பழகும்போது நம்மிடம் தீயகுணங்கள்,தீயசெயல்கள் வெளிப்பட்டு விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்கள் குர்ஆனையோ ஹதீஸையோ வரலாறுகளையோ பார்த்து இஸ்லாத்தை விளங்குவதில்லை மாறாக நமது வாழ்க்கையை பார்த்து தான் இஸ்லாத்தை எடை போட்டு பார்க்கின்றார்கள்.

அடுத்தவர் சிந்திய சளியை அகற்றிய அதிபரை கண்டதுண்டா?  
புகாரி – 405  

நாசத்தைக் கூறிய நயவஞ்சகனிடமும் நளினத்தை காட்டிய அதிபரைக் கண்டதுண்டா?   
புகாரி – 6024

அதிபரோ தரையில் நடக்க தான் நியமித்த அதிகாரியோ குதிரையில் இருக்க வாழச்சொல்லி வழியனுப்பிய அதிபரைக் கண்டதுண்டா? 
அஹ்மத் - 21040.

சிறுவர்களிடம் முந்திக்கொண்டு முகமன் கூறும் அதிபரைக் கண்டதுண்டா?  
புகாரி – 6247

போரிலும் கூட கெட்ட போர் முறைகளை மாற்றி திருத்தம் செய்து போர்களை கண்ட அதிபரைக் கண்டதுண்டா?
 புகாரி – 3014

நம் நபி நாயகத்தை போன்று எல்லோரிடத்திலும் நற்குனத்தோடு வாழும் நல்ல மக்களாக வல்லோன் அல்லாஹ் நம்மை ஆக்குவானாகஆமீன்.

No comments:

Post a Comment